பத்ரி பதிவில் இட்ட மறுமொழி
பத்ரி,
பதிவுக்கு நன்றி..
இந்த சம்பவம் குறித்து எழுதுவதற்கோ பதிவு செய்வதற்கோ "பலருக்கு" ஆர்வம் இருப்பதில்லை. சவுக்கடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராக கூலி விவசாயத் தொழிலாளர்களை அமைப்பாகத் திரட்டிப் போராடியதில் அனைத்து சாதித் தோழர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். நல்லவேளை அவர்களுடைய ஆர்வத்திற்கு யாரும் அப்போது களங்கம் கற்பிக்கவில்லை.
சீனிவாசராவ், மணியம்மை மற்றும் பலர் தலித் மக்கள் அல்லர். ஆனால் ராமய்யாவின் குடிசையில் பலியான அனைவரும் தலித் மக்கள்.. கூலி விவசாயத் தொழிலாளர்கள்..
வன்கொடுமைக்கு எதிராகப் போராடிய செங்கொடி இயக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு கீழ்வெண்மணி நினைவகத்தைக் கைப்பற்ற நவீன தலித் போராளிகள் முயல்வதாகவும் அவ்வப்போது செய்திகள் வருகின்றன.
தென்பரை முதல் வெண்மணி வரை என்ற ஆவணப் புத்தகம் அப்பணசாமியால் தொகுக்கப்பட்டது. புத்தகத்தின் பெயர் சரிதானா என்று திடீர் சந்தேகம்.. பாரதி புத்தகாலயம் வெளியிட்டதாக நினைவு..டிசம்பர் 25, 1968 இல் உயிரோடு இருந்தவர்கள் 25 ஆண்டுகள் கழித்து அந்த கொடுமையான இரவை நினைவு கூர்ந்துள்ளார்கள்..
பாரதி கிருஷ்ணகுமாரின் சி.டி.யை நான் இன்னும் பார்க்கவில்லை. இந்த கொடூரமான சம்பவம் குறித்து- நிலப்பிரபுத்துவத்தின் கோர முகம் குறித்து ஏன் தமிழ்ச் சூழலில் அதிகம் பேசப்படுவதில்லை?
இது விவாதத்திற்குரிய விஷயம்.
அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா என்பதாலா?
அதன்பின் வந்த அனைத்து ஆட்சிகளும் அவரது பெயரைப் பயன்படுத்துவதாலா?
அல்லது கொளுத்திய கரங்களைக் குலுக்கிக் கொண்டு செங்கொடி இயக்கத்தினர் அசெம்பிளி சீட்டுகளுக்கு ஐக்கிய முன்னணி அமைத்ததாலா?
அல்லது நிலவுடைமைப் பண்பாட்டின் ஒரு கூறைத் தேர்வு செய்து அதைக் காப்பாற்ற மாபெரும் மாபெரும் இயக்கங்களை நடத்த வேண்டிய அவசியம் இங்கு சில கட்சிகளுக்கு இருப்பதாலா?
சரி விடுங்கள்..
இன்னும் சில பின்னூட்டங்கள் ஏன் வரவில்லை?
இந்தப் பதிவு போடுவதில் பத்ரிக்கு ஏன் அக்கறை? எந்த ஈயத்தின் சதிக்கு பாரதி கிருஷ்ண குமார் பலியாகி இருக்கிறார்?
பத்ரியின் அலுவலகத்திற்கு வந்து பா.கி.கு காபி வாங்கி சாப்பிட்டிருப்பாரோ என்று முதலில் ஐயப்பட்டேன். ஆனால் அந்த சந்தேகத்தை பத்ரி போக்கிவிட்டார்.
அடுத்து நான் ஏன் பத்ரியின் பதிவுக்கு நன்றி தெரிவித்து பதிவு போடவேண்டும்?
அவர் அது குறித்து எழுதியதற்கு மறு மொழியிட்டாயா, இவர் இது குறித்து எழுதியதற்கு பின்னூட்டமிட்டாயா? இப்போது மட்டும் என்ன அக்கறை?
இது போன்ற கேள்விக் கணைகள் வீசப்படும். புரிந்தவர், புரியாதவர், அறிந்தவர், அறியாதவர் அனைவரும் எழுப்பும் கேள்விக் கணைகளுக்கு எப்படி பதில் சொல்வது? புரியவில்லை தான்..
1 Comments:
இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....
பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா
Post a Comment
<< Home