எனக்குக் கேட்க மட்டும் தான் தெரியும் |
நடுத்தரக் குடும்பங்களில் தங்கள் வீட்டு வேலைக்கு உதவுவதற்கு பெண்கள் நியமிக்கும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அவர்களை நடத்தும் விதம் குறித்து பத்மா அரவிந்த் தனது பதிவில் எழுதப்போக, அதை சாதிரீதியாக சில நண்பர்கள் எடுத்துக்கொண்டார்கள் . அது அவசியமா இல்லையா என்பது வேறு விஷயம்.
ஆனால் அதையெல்லாம் படித்தபோது எனக்குள் எழுந்த கேள்விகளை இங்கு முன் வைக்கிறேன் . அவர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்படுகிறதா?
பொதுவாகக் கூலியை நியாயமான கூலி, குறைந்தபட்ச கூலி என்றெல்லாம் சொல்வார்கள். அதாவது வீட்டைத் துடைத்து சுத்தம் செய்யும் ஒரு பெண்ணுக்கு வேலை நேரம் 1 மணி நேரம் ஆகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே ஒரு மணி நேரம் செலவழித்து நமது அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் பெண்ணுக்கு நமது நிறுவனங்கள் வழங்கும் கூலியை நாம் நமது வீடுகளில் உதவுபவர்களுக்குக் கொடுக்க முன்வருகிறோமா? அப்படி முன்வந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் "ஏன் நீங்கள் இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள்? உங்களால் எங்கள் வீடுகளில் பிரச்சனை எழுகிறது. நாங்களும் உயர்த்திக் கொடுக்க வேண்டியதிருக்கிறது" என்று ஏன் சொல்கிறார்கள்?
அமைப்பாக்கப்படாத இந்த வீட்டு வேலையில் உதவும் பெண்களுக்கு எந்த அரசாங்கமும் குறைந்த பட்சக் கூலியை நிர்ணயம் செய்யாதது ஏன்? சந்தையே அதற்கான விலையை Demand and Supply Theory மூலம் தீர்மானித்துக் கொள்ளட்டுமே என்ற தாராளமயக் கொள்கைதான் காலங்காலமாக நடைமுறையில் இருக்கிறதா?
சங்ககாலத்தில் இருந்து தொழிற்சங்க காலம் கடந்து ஸ்வயம் சேவக் சங்க பரிவார் காலம் வரை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சூழலுக்கு எதிராக ஏதேனும் இயக்கங்கள் நடந்திருக்கிறதா ?
இந்தியா தவிர மற்ற நாடுகளில் அவர்களது ஊதியம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? உங்கள் அனைவரிடம் இருந்தும் அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே கேள்விகளாக எழுப்பியுள்ளேன்.
அப்பாடா இதற்குச் சாதி மூலாம் பூசமுடியாதென்று நிம்மதி. ( சாதியம் வேரோடி இருக்கும் ஒரு சமூகத்தில் அதைப் புறந்தள்ளித் தப்பி ஓடுவது ஆதிக்க சாதிகளுக்குப் பல்லக்குத் தூக்கும் வேலைதான் என்று உள்ளிருந்து ஓர் அந்நியன் குரல் கொடுக்கிறான். இருந்தும் வலைப்பதிவுகளில் நாகரீகம் கருதி சமரசம் செய்து கொள்ள வேண்டியது தான் என்று அவனை அடக்குகிறேன்).